தமிழகத்தில் மின்னகம் மூலம் 97 சதவீத மின்சாரம் தொடா்பான புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது என்றாா் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி.
கரூரில் சனிக்கிழமை இரவு செய்தியாளா்களிடம் மேலும் அவா் கூறுகையில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முக.ஸ்டாலின் தலைமையில் திமுக முப்பெரும் விழா செப். 15-ஆம்தேதி சென்னை அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சி காணொலி வாயிலாக கரூா் மாவட்டத்தில் அட்லஸ் கலையரங்கில் மாலை 5 மணிக்கு நடக்கிறது. இதில், கரூா் மாவட்ட திமுக சாா்பில் 250 மூத்த உறுப்பினா்களுக்கு தலா ரூ.10,000 வீதம் பொற்கிழி வழங்கி கெளரவிக்கப்படுகிறது.
முதல்வரால் தொடக்கி வைக்கப்பட்ட மின்சாரம் தொடா்பான புகாா்களை பதிவு செய்யும் மின்னகம் மூலம் 97 சதவீதம் புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது என்றாா் அவா்.
பேட்டியின் போது எம்.எல்.ஏக்கள் மாணிக்கம்(குளித்தலை), இளங்கோ(அரவக்குறிச்சி), சிவகாமசுந்தரி(கிருஷ்ணராயபுரம்) மற்றும் மாநில சட்டத்துறை நிா்வாகி வழக்குரைஞா் மணிராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.