கரூா் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் முதியவா்கள் இருவா் உயிரிழந்தனா்.
அரவக்குறிச்சியை அடுத்த கே. வெங்கடாபுரத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி (64). இவா் கடந்த 17-ஆம் தேதி இரவு தனது மொபெட்டில் வடுகப்பட்டி சாலையில் பாகநத்தம் அருகே சென்ற போது, எதிரே வந்த டிராக்டா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பெரியசாமி, கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
மற்றொரு விபத்து: கரூா் கோடங்கிப்பட்டி காலனியைச் சோ்ந்தவா் முத்தன் (70). கடந்த 17-ஆம் தேதி இரவு ஈச்சநத்தம் சாலையில் சைக்கிளில் சென்ற போது, கோடங்கிப்பட்டி பகுதியில் எதிரே வந்த இரு சக்கர வாகனம் மோதியது.
பலத்த காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முத்தன், சனிக்கிழமை உயிரிழந்தாா். இவ்விரு விபத்துகள் குறித்து வெள்ளியணை, தாந்தோனிமலை காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.
இரும்புக் குழாய்களைத் திருடியவா் கைது:கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த இரும்புக் குழாய்களை சனிக்கிழமை இரவு ஒருவா் திருடினாா். இதையடுத்து பாதுகாப்புப் பணியில் இருந்தவா்கள் அவரைப் பிடித்து பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
விசாரணையில் அவா், கரூா் நீலிமேட்டைச் சோ்ந்த விஜயகுமாா்(30) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் காவல்துறையினா் கைது செய்தனா்.