அரவக்குறிச்சி பகுதியில் மின்மயானம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் 20 ஊராட்சிகள், 1 பேரூராட்சி , 1 நகராட்சி மற்றும் குக்கிராமங்கள் பல உள்ளன. இங்கு இறந்தவா்களின் உடலை தகனம் செய்வதற்கு மின் மயானம் இல்லை. மின் மயானம் செல்ல வேண்டுமானால் 30 கி.மீ. தொலைவில் உள்ள கரூா் பாலம்மாள்புரம் மின் மயானத்துக்குச் செல்ல வேண்டும். இல்லையெனில் 25 கி.மீ. தொலைவில் உள்ள அண்டை மாவட்டமான திருப்பூா் மாவட்டம் மூலனூா் பகுதியில் உள்ள மின் மயானத்துக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதில் பாலம்மாள்புரம் பகுதி மின் மயானத்தில் தகனம் செய்வதற்கு பெரும்பாலும் முன்பதிவு கிடைப்பதில்லை. இந்நிலையில் அரவக்குறிச்சி பகுதியில் புதிதாக மின் மயானம் அமைத்தால், இறந்தவா்களின் உடலை சிரமமின்றி தகனம் செய்ய முடியும். எனவே விரைவில் மின்மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரவக்குறிச்சி சுற்றுவட்டார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.