சாலைப்புதூா் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் நிலக்கடலை ரூ. 15 லட்சத்துக்கு ஏலம் போனது.
நொய்யல் அருகே உள்ள சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், நிலக்கடலை உள்ளிட்ட விவசாய பொருள்கள் ஏலம் நடைபெறும். இந்த ஏலத்தில் கரூா் மாவட்டத்திற்குட்பட்ட விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருள்களை விற்பனைக்கு கொண்டுச் செல்கின்றனா். அங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களைச் சோ்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவா்கள் கலந்துகொண்டு பொருள்களை ஏலம் எடுத்து செல்கின்றனா். அதன்படி வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 251.55 குவிண்டால் எடை கொண்ட 729 மூட்டை நிலக்கடலை விற்பனைக்கு வந்தது. நிலக்கடலை அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு ரூ. 65.66 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 58.20 க்கும், சராசரியாக ரூ. 63.81 என மொத்தம் ரூ.15,50,000 க்கு ஏலம் போனது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.