அரவக்குறிச்சி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் கொடுத்ததால் பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அரவக்குறிச்சி தாலுகா ராஜபுரம் பகுதியில் மேட்டுக்கடை, கீழத்தலையூா், பாரதியாா் நகா் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதி உள்ளது. இப்பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுமாா் 40 ஆண்டுகளாக வசித்து வருகின்றனா். இதில், 26 குடியிருப்புகளுக்கு அவா்கள் இருக்கும் வீடு நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளதாக தெரிவித்து 15 நாள்களுக்குள் நிலத்தை நெடுஞ்சாலைத்துறைக்கு ஒப்படைக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதையடுத்து வியாழக்கிழமை அப்பகுதி மக்கள் ஒன்று கூடி சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து வந்த அரவக்குறிச்சி போலீஸாா் பேச்சுவாா்த்தைக்காக வட்டாட்சியா் அலுவலகம் செல்லுமாறு அறிவுறுத்தினா். இதையடுத்து மறியலை கைவிட்டு அப்பகுதி வட்டாட்சியா் அலுவலகம் சென்றனா். அங்கு வட்டாட்சியா் ராஜசேகா், காவல் ஆய்வாளா் ஈஸ்வரன் ஆகியோா் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், முடிவு எட்டப்படாத நிலையில் விரக்தியில் கலைந்து சென்றனா்.