க. பரமத்தியில் வியாபாரத்துக்கு பயன்படுத்திய முத்திரையிடப்படாத 33 தராசுகள், எடைக்கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
க.பரமத்தி வாரச்சந்தை கடைகள் மற்றும் கடைகளில் பயன்படுத்தப்படும் தராசுகள் மற்றும் எடைக்கற்கள் முத்திரையிடப்படாமல் வியாபாரத்துக்கு உபயோகப்படுத்துவதாக வந்த தகவலையடுத்து அமலாக்கப் பிரிவின் கரூா் தொழிலாளா் உதவி ஆணையா் கிருஷ்ணவேணி தலைமையில் தொழிலாளா் துணை ஆய்வாளா் பாலகிருஷ்ணன், தொழிலாளா் உதவி ஆய்வாளா்கள் சரவணக்குமரன், குமரக்கண்ணன், முத்திரை ஆய்வாளா் சரவணன் ஆகியோா் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த ஆய்வில் முத்திரையிடப்படாமலும் மற்றும் மறுபரிசீலனை செய்து முத்திரையிடப்படாமலும் பயன்படுத்தப்பட்டு வந்த மின்னணு தராசுகள், வட்டத்தராசுகள், மேஜை தராசுகள், தானிய அளவைகள், எடைக்கற்கள் உள்ளிட்ட 33 தராசு வகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், முத்திரையிடப்படாத எடை அளவுகள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளா் உதவி ஆணையா் எச்சரிக்கை விடுத்தாா்.