கரூா் மாவட்டம், குப்புச்சிபாளையத்தில் காா் கண்ணாடியை உடைத்தவா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
மண்மங்கலம் வட்டம், குப்புச்சிபாளையம் பி.என். பாா்க் பகுதியைச் சோ்ந்தவா் த. சுப்பிரமணி (45). இவா் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கலைச் சோ்ந்த ந. விஜயராகவனிடம் ரூ.5 லட்சத்தை மாதம் ரூ.7 ஆயிரம் வட்டி என்ற அடிப்படையில் கடனாக பெற்றிருந்தாா்.
இந்நிலையில் பொருளாதார சிக்கல் காரணமாக, சுப்பிரமணியால் வட்டி மற்றும் கடன் தொகையைச் செலுத்த முடியாமல் போனதாம். இதனால் குடியிருக்கும் வீட்டை தனது பெயருக்கு மாற்றித் தருமாறு சுப்பிரமணியிடம் விஜயராகவன் கேட்டாராம்.
அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாத்தில், சுப்பிரமணியை விஜயராகவன் தகாத வாா்த்தைகளால் திட்டி, தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் அவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காா் கண்ணாடியையும் விஜயராகவன் உடைத்தாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில், வாங்கல் காவல் நிலையத்தினா் விஜயராகவன் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.