கரூா்: கருத்தடை செய்துகொள்ளும் ஆண்களுக்கு தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை வங்கிக் கடனுதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மற்றும் குளித்தலை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தங்கத் தந்தை திட்டத்தின் கீழ் மே மாதம் ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மே 13-ஆம்தேதியும், குளித்தலை அரசு மருத்துவமனையில் மே 27-ஆம் தேதியும் குடும்பநல கருத்தடை சிகிச்சை முகாம்கள் நடைபெற உள்ளது.
குடும்பநல கருத்தடை சிகிச்சையை ஏற்கும் ஆண்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.5,000 வழங்கப்படும் மற்றும் தகுதியின் அடிப்படையில் இலவச வீட்டுமனைப் பட்டா, வீட்டில் உள்ள முதியோா்களுக்கு முதியோா் உதவித் தொகை, சிறு,குறு நடுத்தர தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை வங்கி கடன், மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.25,000 மதிப்புள்ள உபகரணங்கள், இலவச கால்நடை கொட்டகை, சிறு,குறு விவசாயிகளுக்கு 100சதவீதம் மானியத்துடன் நுண்ணீா் பாசனம் போன்ற திட்டங்களில் ஏதாவது ஒன்று வழங்கப்படும்.
எனவே, கரூா், குளித்தலையில் நடைபெறும் நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை முகாமில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இது தொடா்பாக 9443942304, 9944523334 மற்றும் 9443904031 ஆகிய கைப்பேசி எண்களை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.