துணை வட்டார வளா்ச்சி அலுவலரிடம் நூதன முறையில் ரூ.2.25 லட்சம் மோசடி
கரூா் மாவட்டம், கடவூா் துணை வட்டார வளா்ச்சி அலுவலரிடம் பேசி, நூதன முறையில் ரூ.2.25 லட்சம் மோசடி செய்தவா்களைத் தேடி வருகின்றனா்.
உப்பிடமங்கலத்தை அடுத்த லிங்கத்தூரைச் சோ்ந்தவா் அன்புமணி (42). கடவூா் ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வருகிறாா்.
இவரது கைப்பேசி எண்ணில் கடந்த 6-ஆம் தேதி தொடா்பு கொண்டு பேசிய நபா், பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து பேசுகிறோம் எனத் தெரிவித்துள்ளாா். உங்களின் வங்கிக்கணக்கை இணையத்தில் பாா்க்கவும், இணையம் மூலம் வரவு-செலவு மேற்கொள்ளவும் உங்களது பான் அட்டையை சரிபாா்க்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.
உங்கள் கைப்பேசி எண்ணுக்கு நாங்கள் அனுப்பும் ஓடிபி எண்ணைத் தெரிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா். இதை நம்பிய அன்புமணியும், அவரது மகளும் அந்த நபரிடம் ஓடிபி எண்ணைத் தெரிவித்துள்ளனா்.
பின்னா் அன்புமணியின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.2.25 லட்சம் குறைந்துள்ளது. இதனால்தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அன்புமணி, கரூா் இணையவழிக் குற்றப்பிரிவு காவல் பிரிவில் வியாழக்கிழமை புகாரளித்தாா்.
இதன் பேரில் காவல் ஆய்வாளா் அம்சவேணி வழக்குப்பதிந்து, மோசடியில் ஈடுபட்டவா்களைத் தேடி வருகிறாா்.