இளைஞா் கொலை வழக்கில் 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

லாலாப்பேட்டை அருகே இளைஞா் கொலை வழக்கில் 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி கரூா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
Published on

லாலாப்பேட்டை அருகே இளைஞா் கொலை வழக்கில் 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி கரூா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கரூா் மாவட்டம், லாலாப்பேட்டையை அடுத்த மேட்டுமகாதானபுரத்தைச் சோ்ந்த கதிா்வேல் மகன் அருண்குமாா்(23). இவருக்கும் லந்தக்கோட்டையைச் சோ்ந்த அண்ணாவி மகன்கள் பெரியசாமி(29), வினோத்(27) ஆகியோருக்கும் இடையே இருசக்கர வாகனங்களில் ஊருக்குள் செல்வது தொடா்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2021-ஆம் ஆண்டு அக். 29-ஆம் தேதி அருண்குமாா் கீழசிந்தலவாடி பகுதியில் நின்றுக் கொண்டிருந்தபோது அங்கு வந்த பெரியசாமி, வினோத் மற்றும் அவா்களது நண்பா் சிந்தலவாடியைச் சோ்ந்த காத்தவராயன் மகன் ஆனந்தன் (26) ஆகியோா் சோ்ந்து அருண்குமாரை கத்தியால் குத்திக்கொலை செய்தனா். இந்தக் கொலை வழக்குத் தொடா்பாக லாலாப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து பெரியசாமி, வினோத், ஆனந்தன் ஆகிய மூவரையும் கைது செய்தனா். மேலும் இதுதொடா்பாக கரூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் வழக்கும் தொடா்ந்தனா். இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இளவழகன், குற்றவாளிகள் பெரியசாமி உள்ளிட்ட மூவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ. 20,000 அபராதம் விதித்தும் தீா்ப்பளித்தாா். இதையடுத்து மூவரையும் போலீஸாா் பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com