பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் புதன்கிழமை உயிரிழந்தார்.
குன்னம் வட்டம், எழுமூர் அருகேயுள்ள மழவராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மனைவி அமிர்தம் (45). இவர், எழுமூர்- ஆண்டிக்குரும்பலூர் சாலையில் புதன்கிழமை மாடுகளை ஓட்டிச் சென்றார்.
அப்போது, அந்த வழித்தடத்தில் கடந்த 3 நாள்களாக அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். மேலும், அவரது மாடு, நாய் ஆகியவையும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன.
தகவலறிந்த மங்கலமேடு போலீஸார் இறந்தவரின் சடலத்தை மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
மின்சார கம்பி அறுந்து கிடப்பது குறித்து அப்பகுதி பொதுமக்கள் மின்வாரிய அலுவலர்களுக்கு பலமுறை தகவல் அளித்தனராம். ஆனால், அவற்றை சீரமைக்காத மின் வாரிய அலுவலர்களின் அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம் என, அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.