நிலுவை தொகை கோரி 2 ஆவது நாளாக கரும்பு விவசாயிகள் போராட்டம்
By DIN | Published on : 05th January 2017 08:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பெரம்பலூர் சர்க்கரை ஆலை வளாகத்தில் கரும்பு நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி, 2 ஆவது நாளாக புதன்கிழமை தொடர்ந்த காத்திருப்பு போராட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் நூதன முறையில் அரை நிர்வாணப் போராட்டம் நடத்தினர்.
விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகை ரூ. 20.49 கோடியை உடனடியாக வழங்க வேண்டும். கரும்பு டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் விலை அறிவிக்க வேண்டும். பெரம்பலூர் சர்க்கலை ஆலையில் 18 மெகா வாட் மின்சாரம் உள்ளிட்ட திட்டங்களை துரிதப்படுத்தி, நிகழாண்டு கரும்பு அரவை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவித்து, நெல் ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரமும், கரும்புக்கு ரூ. 50 ஆயிரமும், இதர பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரமும் இழப்பீடு வழங்க வேண்டும். பாடாலூரில் அமைக்கப்பட்டுள்ள பால் குளிரூட்டும் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும். மேலும், பால் பவுடர் தொழிற்சாலை அமைத்து பால் பவுடர் தயாரிக்கும் பணி தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
கரும்பு விவசாயிகள் சங்க பெரம்பலூர் மாவட்டத் தலைவர் ஏ.கே. ராஜேந்திரன் தலைமையில், மாவட்ட செயலர் அன்பழகன், பங்குதாரர்கள் சங்கம் மற்றும் கரும்பு உற்பத்தியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் முருகேசன், மாவட்ட துணைத் தலைவர்கள் கருப்புடையார், துரைசாமி, ஜானகிராமன், ஞானசேகரன், மாணிக்கம், மாவட்ட பொருளாளர் காமராஜ் உள்ளிட்ட பலர் செவ்வாய்க்கிழமை முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து, 2 ஆவது நாளாக புதன்கிழமை நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்ற கரும்பு விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கப் பிரமுகர்கள் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தி அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.