பெரம்பலூர் அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் வியாழக்கிழமை உயிரிழந்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள வேள்விமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிதுரை (60), விவசாயி. இவர் வியாழக்கிழமை காலை கீழப்பெரம்பலூரிலிருந்து வயலூர் கிராமத்துக்கு தனது பைக்கில் சென்றபோது, அவ்வழியே வந்த மினி பேருந்து மோதி உயிரிழந்தார். தகவலறிந்த குன்னம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று அவரது உடலை மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுதொடர்பாக வழக்குப் பதிந்த போலீஸார், மினி பேருந்து ஓட்டுநர் கீழப்பெரம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த சதீஷை (24) கைது செய்து விசாரிக்கின்றனர்.
சிகிச்சை பெற்றவர் சாவு: பெரம்பலூர் அருகேயுள்ள மேலப்பூலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகலிங்கம் மகன் கனகவேல் (50). கூலித் தொழிலாளியான இவர், கடந்த சில நாள்களாக நோயால் அவதியுற்று வந்தாராம். இந்நிலையில், கடந்த 27 ஆம் தேதி அவரது வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றார். இதையடுத்து பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.