தேர்தல் பணியாற்றும் அரசு அலுவலர்களுக்கான அஞ்சல் வாக்குச் சீட்டுகள் அனுப்பும் பணியை செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வே. சாந்தா.
பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பெரம்பலூர், துறையூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி மற்றும் குளித்தலை ஆகிய சட்டப்பேரவை பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் ராணுவ வீரர்கள், துணை ராணுவத்தினர், மத்திய காவல் துறையினர், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தேர்தலில் வாக்களிக்கும் வகையில், தேர்தல் ஆணையத்தால் அஞ்சல் மூலம் வாக்களிக்கும் முறை நடைமுறையில் உள்ளது.
இதன் மூலம் தங்களுடைய பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் நேரடியாக வந்து வாக்களிக்க இயலாதவர்கள் அஞ்சல் வாக்குச் சீட்டுகளை பயன்படுத்தி தங்களது ஜனநாயகக் கடைமையை ஆற்றலாம். அதனடிப்படையில், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட மேற்கண்ட சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தலா 5,000 வாக்காளர்களுக்கு வாக்களிக்கும் படிவம் அனுப்பும் பணி, மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அதற்கான ஆயத்தப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா. ஆய்வின்போது, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் என். விஸ்வநாதன் (பெரம்பலூர்), பி. மஞ்சுளா குன்னம்) உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.