பெரம்பலூர், ஆலத்தூர் ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் அமமுக வேட்பாளர் எம். ராஜசேகரன் வாக்கு சேகரிப்பில் சனிக்கிழமை ஈடுபட்டார்.
பெரம்பலூர் ஒன்றியத்துக்குள்பட்ட செங்குணம், அருமடல், கவுல்பாளையம், கல்பாடி, சிறுவாச்சூர், ரெங்கநாதபுரம், ஆலத்தூர் ஒன்றியத்துக்குள்பட்ட விஜயகோபாலபுரம், பாடாலூர், இரூர் உள்ளிட்ட சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரசாரத்தில் ஈடுபட்ட அமமுக வேட்பாளர் எம். ராஜசேகரன் பேசியது:
விவசாயக் கூலித் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் 100 நாள் வேலைத் திட்டத்தை, முழுமையாக 150 நாள் திட்டமாக உயர்த்தி, ஆண்டுதோறும் வேலைவாய்ப்பு அளிக்கப்படும். பெரம்பலூர் நகர மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டைக் களைய, காவிரியிலிருந்து புதிதாக கால்வாய் அமைத்து குடிநீர் விநியோகிக்கப்படும். இப்பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாயக் கிணறுகளில் ஆழ்குழாய் கிணறு அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சின்ன வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு, திறக்கப்பட்டு பயனற்றுக் கிடக்கும் சின்ன வெங்காயக் குளிர்ப் பதனக் கிடங்கை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர். அமைப்புச் செயலர் மனோகரன், மாவட்ட செயலர் எஸ். கார்த்திகேயன், ஒன்றியச் செயலர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அரியலூர்: சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் ஆ. இளவரசன் அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியப் பகுதிகளில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.
திருமானூர் ஒன்றியப் பகுதிகளுக்குட்பட்ட வாரணவாசி, பார்ப்பனச்சேரி, மேலப்பழுவூர், பூண்டி, ஆங்கியனூர், சன்னாவூர், இலந்தைக்கூடம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் திறந்தவேனில் நின்றபடி வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின்போது மாவட்டச் செயலர் துரை. மணிவேல் உட்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.