பரமத்தி வேலூர் வட்டம், பரமத்தி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்த இளைஞர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள நாயக்கனூரைச் சேர்ந்த தங்கவேல் மகன் விக்னேஷ் (22). கூலித் தொழிலாளி.
இவரும் பரமத்தி அருகே உள்ள மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பெத்தான் மகன் தனபால் (24) என்பவரும் சனிக்கிழமை இருசக்கர வாகனத்தில் பரமத்தி அருகே உள்ள மாவுரெட்டி அருகே வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயமடைந்த விக்னேஷை அருகில் இருந்தவர்கள் மீட்டு, பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியில் விக்னேஷ் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த தனபால் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து பரமத்தி போலீஸார் வழக்குப் பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.