பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, கல்லூரி முதல்வர் து. சேகர் தலைமை வகித்தார். விழாவில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் துரையரசன் பங்கேற்று, 130 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி பேசியது:
பட்டம் பெறும் மாணவர்கள் மேலும் பல பட்டங்களைப் பெற்று வாழ்வில் மிக உயர்ந்த நிலையை அடைய வேண்டும். சந்தோஷமாக வாழ மனிதர்களை நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும். ஒருவரிடம் உள்ள நல்ல பழக்கவழக்கங்களை புகழ்ந்து, அவர்களுக்கு நன்றி சொல்லும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். கல்லூரி பேராசிரியர்கள் அவ்வப்போது மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, எழுத்துப்போட்டி, கவிதை போட்டி உள்ளிட்டவை நடத்த வேண்டும். அதில், அனைத்து துறை மாணவ மாணவிகளும் பங்கேற்று தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். மேலும், மாணவ, மாணவிகள் உயர்ந்த இலக்கை வைத்து அதை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்றார் அவர்.
விழாவில், கல்லூரி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கணினி அறிவியல் துறை தலைவர் ராமராஜ் வரவேற்றார். உடற்கல்வி இயக்குநர் மாரிமுத்து நன்றி கூறினார்.