பெரம்பலூர் அருகே இளைஞரைக் கடத்தி ரூ. 1.67 கோடி பணத்தை, ஆன்லைன் மூலம் கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவரை, பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்துக்குள்பட்ட கிளியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (30). இவர், திருச்சி மாவட்டம், உறையூர் பகுதியில் ஷேர் மார்க்கெட் டிரேடிங் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவரிடம் பணப்புழக்கம் அதிகம் இருந்ததையறிந்த பெரம்பலூர் மாவட்டம், வி.ஆர்.எஸ்.எஸ். புரம் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் சுரேஷ்(32), எறையூர் கிராமத்தைச் சேர்ந்த மனோகரன் (40), திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (30), ராகுல் (32) ஆகியோர் முருகனைக் காரில் கடத்திச் சென்று ரூ. 1.67 கோடியை மனோகரன் ஆன்லைன் மூலம் தனது வங்கிக் கணக்கிற்கு
மாற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், விஜயகுமார், ராகுல் ஆகியோர் முருகனின் வீட்டுக்கு ஆள் அனுப்பி ரூ. 27 லட்சத்தை முருகன் மனைவியிடம் வாங்கிக் கொண்டதாகவும், அதன் பிறகு முருகனை விடுவித்ததாகவும் தெரிகிறது.
இதுகுறித்து திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி வரதராஜிடம் முருகன் புகார் அளித்தார். இதையடுத்து, இந்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுக்குமாறு பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு ஐ.ஜி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, சுரேஷ், விஜயகுமார், ராகுல் ஆகியோரைப் போலீஸார் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தனர். இவ்வழக்கில் முக்கியக் குற்றவாளியான மனோகரன் தலைமறைவானார். இந்நிலையில், எறையூர் பகுதியைச் சேர்ந்த சிங்காரம் மகன் மனோகரனை (40) போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.