பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அகரம் சீகூர் கிராமத்தில் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான செல்பேசி கோபுரம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இப்பணியில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாடசாமி (27) உள்ளிட்ட பலர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், திங்கள்கிழமை காலை செல்பேசி கோபுரத்தின் மீது ஏறி பணியில் ஈடுபட்டிருந்த மாடசாமி நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதில், பலத்த காயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த மங்களமேடு போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று, மாடசாமி உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.