பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
பெரம்பலூர் அருகேயுள்ள செஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுபதி மகன் யோகராஜ் (52). பெரம்பலூர் அருகேயுள்ள அரணாரை காலனியைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் ராமச்சந்திரன் (29). இருவரும் பெயிண்டர்கள்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை பெரம்பலூர் - ஆலம்பாடி சாலையில் தனியாருக்குச் சொந்தமான எரிவாயு கிடங்கு அருகே மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது, எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த இருவரும் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில், தீவிர சிகிச்சைக்காக திருச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யோகராஜ் திங்கள்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.