பெரம்பலூர் உழவர் சந்தைக்கு வெளியே கடை அமைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகளை அகற்றக்கோரி, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை அலுவலகத்தை விவசாயிகள் புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்- வடக்கு மாதவி சாலையிலுள்ள உழவர் சந்தையில், மாவட்டத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விளைபொருள்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், உழவர் சந்தைக்கு வெளியே சுமார் 20 -க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தரைக்கடைகள், தள்ளுவண்டி கடைகள் அமைத்து காய்கறி உள்ளிட்ட விவசாய உற்பத்தி பொருள்களை விற்பனை செய்கின்றனர்.
சந்தைக்கு வரும் பொதுமக்கள் வெளியே உள்ள கடைகளில் அதிக எண்ணிக்கையிலான பொருள்களை வாங்கிச் செல்கின்றனராம்.
இதனால், உழவர் சந்தைக்கு பொதுமக்களின் வருகை குறைந்து வியாபாரம் குறைந்து வருகிறதாம். இதுகுறித்து பலமுறை வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை அலுவலர்களிடம் விவசாயிகள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், உழவர் சந்தை வளாகத்திலுள்ள வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை அலுவலகத்தை புதன்கிழமை காலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்குள்ள அலுவலர்களிடம், சந்தைக்கு வெளியே கடை அமைக்க வியாபாரிகளை அனுமதிக்கக் கூடாது.
அவர்களை அகற்ற வேண்டும். ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை எனில், வேளாண் விற்பனைப் பிரிவு அலுவலகத்தை பூட்டுவோம் என எச்சரித்துவிட்டு கலைந்து சென்றனர்.