மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககத்தின் மூலம், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நரிக்குறவர் மற்றும் சீர்மரபினர் மக்களுக்கு, நலத்திட்ட உதவிகள் குறித்த விழிப்புணர்வு முகாம் ஆக. 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நரிக்குறவர்கள் மற்றும் சீர்மரபினர்கள் வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்த்தல், நலத்திட்ட உதவிகள் குறித்த விவரங்களை எடுத்துரைத்தல், நரிக்குறவர்களுக்கு வழங்கப்படும் மானியத்தொகைக்கு தகுதியான விண்ணப்பங்களை பெற்று மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககத்துக்கு அனுப்புதல் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முகாம் நடைபெற உள்ளது. ஆக. 29 காலை 11 மணிக்கு பெரம்பலூர் வட்டத்தில் மலையப்ப நகரிலும், மாலை 3 மணிக்கு வேப்பந்தட்டை வட்டத்தில் எறையூரிலும், 30ஆம் தேதி காலை 11 மணிக்கு குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், மாலை 3 மணிக்கு ஆலத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற உள்ளன.