பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தமிழக உளவுத்துறை போலீஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் வாகன சோதனை மற்றும் ரோந்துப் பணிகளை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்தீபன் உத்தரவின்பேரில், பெரம்பலூர்- அரியலூர் சாலையில் மருதையான் கோயில் என்னும் இடத்தில் குன்னம் போலீஸாரும், பெரம்பலூர்- கடலூர் மாவட்ட எல்லையிலுள்ள அகரம் சீகூர் மற்றும் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருமாந்துறை சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் மங்கலமேடு போலீஸாரும் தீவிர வாகன சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர். மேலும், பெரம்பலூர்- துறையூர் சாலை, செஞ்சேரி புறவழிச் சாலை, ஆத்தூர் சாலை, கோனேரிபாளையம் புறவழிச் சாலை ஆகிய இடங்களில் பெரம்பலூர் போலீஸாரும், வேப்பந்தட்டையில் அரும்பாவூர் போலீஸாரும் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதுதவிர, மாவட்டத்தின் பிரதான இடங்களில் போலீஸார் வாகனங்களில் ரோந்து சென்று வருகின்றனர்.