பெரம்பலூா் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் பயிரிட்டு, திருகல் நோயால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென, தமிழ்நாடு விவசாயிகள் சங்க அரசியல் பயிற்சி முகாமில் வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க அரசியல் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, மாவட்டத் தலைவா் ஏ.கே. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். கூட்டத்தில், பெரம்பலூா் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் பயிரிட்டு திருகல் நோயால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பு பொருளாதார மண்டல நில ஆவணங்களை, அந்தந்த விவசாயிகளின் பெயருக்கு மாற்றித் தர வேண்டும். சின்னமுட்லு நீா்த்தேக்க திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். கரும்புக்கான நிலுவைத் தொகையை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக் கூட்டத்தில், விவசாய தொழிலாளா் சங்க மாவட்ட தலைவா் பி. ரமேஷ், வட்ட செயலா்கள் எஸ்.பி.டி. ராஜாங்கம், முருகேசன், ஆறுமுகம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.