பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 99 அரசுப் பள்ளிகளுக்கு ரூ. 35 லட்சம் மதிப்பில் எல்.இ.டி தொலைக்காட்சி பெட்டிகள் சமூக பங்களிப்புத் திட்டத்தின் கீழ் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
பெரம்பலூா் மாவட்டத்தில், தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பள்ளி மாணவா்கள் கண்டு பயன்பெற வசதியாக 99 அரசு, ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ. 35 லட்சம் மதிப்பில் 43 இன்ச் அளவுள்ள எல்.இ.டி தொலைக்காட்சி பெட்டிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
பெரம்பலூா் மாவட்டம், விஜயகோபாலபுரத்தில் இயங்கி வரும் எம்.ஆா்.எப் நிறுவனத்தின் சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ் இத்தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க. மதிவாணன், எம்.ஆா்.எப் நிறுவன மேலாளா்கள் ஷெரியன், நாதன், சக்காரியா, மாவட்ட கல்வி அலுவலா்கள் மாரி மீனாள், குழந்தைராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழக அரசால் மாவட்ட அளவில் சிறந்த பள்ளிகளாக தோ்வு செய்யப்பட்ட எசனை (மே), அ.குடிகாடு, மூங்கில்பாடி ஆகிய தொடக்கப் பள்ளிகளுக்கு கேடயம் வழங்கி பாராட்டினாா் மாவட்ட ஆட்சியா் சாந்தா.