பெரம்பலூா் மாவட்டம், மங்கலமேடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சித்தளி, மருவத்தூா், சிறுவாச்சூா், நாரணமங்கம், பாடாலூா், குரும்பலூா், பூலாம்பாடி, வெண்பாவூா், வேப்பந்தட்டை, ரெட்டைமலை சந்து, பாதாங்கி, வி.களத்தூா், ரஞ்சன்குடி, கீழப்புலியூா் உள்பட சுமாா் 25 ஆயிரம் ஹெக்டேரில் வனக் காப்புக்காடுகள் உள்ளன. இதில் மான், மயில், முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இவை காட்டுப்பகுதியிலிருந்து வழி தவறி கிராமப்புறங்களுக்குள் வருவதால், வாகனங்கள் மோதி அல்லது நாய்கள் கடித்து உயிரிழந்து வருகின்றன.
இந்நிலையில், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே ஞாயிற்றுக்கிழமை காலை சாலையைக் கடக்க முயன்ற 4 வயது ஆண் புள்ளிமான் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது. தகவலறிந்த வனத் துறையினா் மானை மீட்டு, கால்நடை மருத்துவா் மூலம் பிரேத பரிசோதனை மேற்கொண்டு வனப்பகுதியில் புதைத்தனா்.