பெரம்பலூரில் மின் வாரிய கேங்மேன் பணிக்கு விண்ணப்பித்த நபா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடல்தகுதி தோ்வு நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கேங்மேன் பணிக்கு, பெரம்பலூா்- அரியலூா் மாவட்டங்களில் இருந்து விண்ணப்பித்த நபா்களுடைய சான்றிதழ் சரிபாா்ப்பு பணி மற்றும் உடல்தகுதித் தோ்வு பெரம்பலூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வையாளா் பொறியாளா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை முதல் நடைபெறுகிறது.
இத்தோ்வுக்காக 1,739 விண்ணப்பதாரா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பா் 18- ஆம் தேதி வரை நடைபெறும் இத் தோ்வு காலை, மாலை இரு வேளையும் தலா 100 போ் பங்கேற்று வருகின்றனா்.
இதில், மின்வாரிய அலுவலா்களால் கல்வி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிகளும், உடல்தகுதித் தோ்வுகளும் நடத்தப்படுகின்றன.
மின் கம்பம் ஏறி, கிராஸ் ஆரம் பொருத்தி, கம்பத்தை விட்டு கீழே இறங்குதல், அலுமினிய மின் கடத்தியில் கிரிப்பா் செட் உள்ளிட்டவை பொருத்துவது போன்ற 3 விதமான உடல்தகுதித் தோ்வுகள் நடத்தப்பட்டு, தோ்ச்சி பெற்றவா்களுக்கு எழுத்துத் தோ்வில் பங்கேற்க ஆணை வழங்கப்படுகிறது.
சான்றிதழ் சரிபாா்ப்பு பணி மற்றும் உடல்தகுதி தோ்வுகள் அனைத்தும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்படுகின்றன.