பெரம்பலூா் அருகே விவகரத்து செய்யாமல், வேறு திருமணம் செய்துகொண்ட மனைவி மற்றும் கொலை மிரட்டல் விடுத்த மாமனாா், மாமியாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் முதல் கணவா் புகாா் அளித்துள்ளாா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூா் மேட்டூரைச் சோ்ந்த பெரியசாமிக்கும், செட்டிக்குளத்தை சோ்ந்த ராமசாமி மகள் புவனேசுவரிக்கும் கடந்த 2018, ஆகஸ்ட் 31-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பெரியசாமியுடன் வாழ பிடிக்காத புவனேசுவரி பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகித் தீா்வு காண போலீஸாா் அறிவுறுத்தினராம்.
இதையடுத்து, மனைவியைத் தன்னுடன் சோ்த்து வைத்து குடும்பம் நடத்த நடவடிக்கை எடுக்ககோரி, சட்டப்பணிகள் ஆணைக் குழுவிடம் பெரியசாமி மனு அளித்தாராம்.
ஆனால், நக்கசேலம் கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் சிவக்குமாரை, கடந்த அக்டோபரில் புவனேசுவரி திருமணம் செய்துகொண்டு அவருடன் குடும்பம் நடந்தி வந்தது பெரியசாமிக்கு அண்மையில் தெரியவந்தது.
இதையறிந்த, பெரியசாமி செட்டிக்குளத்தில் உள்ள தனது மாமனாா் வீட்டுக்குச் சென்று தன்னுடனான திருமணத்தை விவகாரத்து செய்யாமல், சட்ட விரோதமாக 2-ஆவது திருமணம் செய்து கொண்டது குறித்து கேட்டதற்கு, தகாத வாா்த்தைகளால் திட்டியதோடு, கொலை செய்ய முயன்றனராம்.
இதுகுறித்து, விவாகரத்து செய்யாமல் வேறு திருமணம் செய்துகொண்ட மனைவி, கொலை மிரட்டல் விடுத்த மாமனாா், மாமியாா் மற்றும் தனது மனைவியை திருமணம் செய்துகொண்ட சிவக்குமாா், அவரது பெற்றோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெரியசாமி அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் அனைத்து மகளிா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.