பெரம்பலூரில் செயல்படும் தனியார் கண் மருத்துவமனை செவ்வாய்க்கிழமை சீல் வைக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் நீதிமன்ற அனுமதியின்பேரில் மீண்டும் திறக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் ஆனந்தமூர்த்தி. எம்.பி.பி.எஸ்., டி.ஓ., பட்டதாரியான இவர், பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உதவி மருத்துவர். மேலும், பாலக்கரை பகுதியில் கண் மருத்துவமனையும் நடத்தி வருகிறார்.
இவர், டி.ஓ., படிப்பில் ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெறவில்லை, இவர் கண் அறுவைச் சிகிச்சை செய்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவர். எனவே, இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரம்பலூர் மாவட்டம், டி. களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் மருத்துவமனையை மூடி சீல் வைக்க, கடந்த 8 ஆம் தேதி உத்தரவிட்டதாம். இதைத் தொடர்ந்து, நலப்பணிகள் இணை இயக்குநர் திருமால், கண் மருத்துவமனையை செவ்வாய்க்கிழமை மூடி சீல் வைத்தார்.
இதுகுறித்து ஏற்கெனவே தகவலறிந்த மருத்துவர் ஆனந்தமூர்த்தி, தனது சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களை சென்னை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அவற்றை ஆய்வு செய்த நீதிமன்றம் மருத்துவர் மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியுள்ள அறுவை சிகிச்சைகளை ஆனந்தமூர்த்தி மேற்கொள்ளலாம் என செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
இதையடுத்து நலப்பணிகள் இணை இயக்குநர் திருமால், கண் மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீல் நடவடிக்கையை திரும்ப பெற்றார். இதுகுறித்து இணை இயக்குநர் திருமால் கூறுகையில், சம்பந்தப்பட்ட மருத்துவர், தேவையான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததால் சீல் எடுக்கப்பட்டது என்றார்.
மருத்துவர் ஆனந்தமூர்த்தி கூறுகையில், யாரோ ஒரு மருத்துவரின் தூண்டுதலின்பேரில் இணை இயக்குநர் நடவடிக்கை எடுத்துள்ளார். சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிடவில்லை. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளேன் என்றார் அவர்.