பெரம்பலூர் மாவட்டத்தில், தொழிலாளர் நல நிதி செலுத்தாத உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜே.ஏ. முகமது யூசுப் வெளியிட்ட செய்திக் குறிப்பு:தொழிலாளர் நல நிதிச் சட்டத்தின் கீழ் தொழிலாளர் நல வாரியம் அமைக்கப்பட்டு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தொழிலாளர் நல நிதிச் சட்டத்தின் கீழ், தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் 5-க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் நிறுவனங்களில் ஒவ்வொரு தொழிலாளிக்கும், அவரது பங்காக ரூ. 10, வேலை அளிப்பவர் பங்காக ரூ. 20 என, ரூ. 30 வீதம் தொழிலாளர் நல நிதி பங்குத் தொகையாக நிர்வாகம் செலுத்த வேண்டும். அதன்படி, 2018 ஆம் ஆண்டுக்கான நிதியைச் செலுத்த வேண்டும்.
ஓராண்டில் 30 நாள்களுக்கு மேல் பணிபுரிந்த அனைத்து வகை தொழிலாளர்களுக்கும், தொழிலாளர் நல நிதி செலுத்த வேலை அளிப்பவர் கடமைப்பட்டவர். கடந்த ஆண்டுக்கான பங்குத் தொகையை ஜன. 31 -க்குள் செலுத்தியிருக்க வேண்டும். இதுவரை செலுத்தாதவர்கள் செயலர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், டி.எம்.எஸ். வளாகம், தேனாம்பேட்டை சென்னை- 600006 எனும் முகவரிக்கு, வங்கி வரைவோலையாக அனுப்பி வைக்க வேண்டும். செலுத்த தவறுவோர் மீது, தமிழ்நாடு தொழிலாளர் துறை அலுவலர்கள் மூலம் வரி வசூல் சட்டத்தின் கீழ், அபராதத்துடன் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.