நெய்யப்படாத கைப்பைகளும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கைப்பைகளாகும் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் மீதான தடை ஜன. 1 முதல் அமல்படுத்தப்படுகிறது. அதன்படி, 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாநில அளவிலான தடையை அரசு அறிவித்தது. அதில், பாலிப்புரப்பிலீன் மற்றும் பாலி எத்திலீனால் ஆன பிளாஸ்டிக் பைகளும் அடங்கும்.
பாலி எத்திலீனால் தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கைப்பைகளை மக்கள் பரவலாக பயன்படுத்தி வந்ததால், அதன் இயல்புகளை நன்கறிந்தனர். பாலிப்புரப்பிலீன் பைகள் (நெய்யப்படாத கைப்பைகள்) அமைப்பு, வண்ணம் துணிப்பைகள் போலவே இருப்பதால், அவற்றை துணிப்பைதான் எனத் தவறாக புரிந்துகொண்டுள்ளனர்.
எனவே, நெய்யப்படாத கைப்பைகளும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களாகும். இத்தகைய நெய்யப்படாத கைப்பைகள் இனிப்பங்காடி, மருந்தகம், உணவகம், துணிக் கடைகளில் துணிப்பைகள் என தவறாக கருதப்பட்டு பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
எனவே, இதுபோன்ற பிளாஸ்டிக் மற்றும் நெய்யப்படாத கைப்பைகளை தவிர்த்து, பாரம்பரிய சணல், துணி மற்றும் காகிதப் பைகளையே பயன்படுத்த வேண்டும்.