பெரம்பலூர் மாவட்டத்தில் தொழில் வளாகங்களை வாடகைக்கு பெற ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியம், நன்னை ஊராட்சியில் 6,617 சதுர அடியில் அமைந்துள்ள 3 கட்டடங்கள், கீழப்புலியூர் ஊராட்சியில் 3,965 சதுர அடியில் அமைந்துள்ள 3 கட்டடங்கள், முருக்கன்குடி ஊராட்சியில் 5,907 சதுர அடியில் அமைந்துள்ள 2 கட்டடங்களில், ஆயத்த ஆடைகள் தயாரித்தல் மற்றும் ஆயத்த ஆடைகள் தயாரிப்பது தொடர்பான பிற தொழில் நிறுவனங்கள் தொழில் தொடங்கி, இப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட வாடகைக்கு விடப்பட உள்ளது. இந்த வளாகங்களை வாடகைக்கு பெற ஆர்வமுள்ள தொழில் முனைவோர் தங்களது விண்ணப்பங்களை பிப். 22 மாலை 5 மணி வரை அளிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்படும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தை அணுகலாம்.