பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில் 2,389 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.
மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் சரிபார்ப்பு மற்றும் தகவல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு முகாம் நடைபெற்றது.
பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் மேலும் கூறியது:
1.1.2019 -இல் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை பதிவு செய்யவும், பெயர் மற்றும் முகவரி திருத்தம் தொடர்பான படிவங்களை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த முகாம்களில், நாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக 1,871 நபர்களும், பெயர் நீக்கம் செய்ய 18 பேரும், பெயர், முகவரி உள்ளிட்ட திருத்தங்களுக்காக 398 நபர்களும், ஒரு பாகத்திலிருந்து மற்றொரு பாகத்துக்கு மாற்றம் செய்துகொள்ள 102 நபர்களும் என மொத்தம் 2,389 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றார் அவர்.