முன்னுரிமை பதிவேட்டில் பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று மின் நுகர்வோர் குறைதீர்க் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூர் மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகத்தில் செயற்பொறியாளர் (பொ) மேகலா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலர் ஆர். ராஜாசிதம்பரம் தலைமையில் விவசாயிகள் அளித்தமனு:
சாதாரண முன்னுரிமையில் மின் இணைப்புக் கோரி, 2000, ஏப்ரல் 1 ஆம் தேதிக்குப் பிறகு பதிவு செய்து காத்திருக்கும் 5 ஆயிரம் விவசாயிகளுக்கும், சுயநிதி திட்டத்தில் பதிவு செய்து காத்திருக்கும் 1,000 விவசாயிகளுக்கும் உடனடியாக மின் இணைப்பு வழங்கிட வேண்டும். தட்கல் திட்டத்தின் கீழ் பதிவு செய்து, மின்வாரிய சுற்றறிக்கையின்படி 6 மாதத்துக்குள் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு இலவசமாக கம்பம், கம்பி அனைத்தையும் மின் வாரிய பொறுப்பில் ஒதுக்கீடு செய்து நடைமுறைப்படுத்த வேண்டும். சுயநிதி திட்டத்தின் மூலம் கட்டணம் பெற்று இணைப்பு கொடுத்த முறையை, வணிக நோக்கத்தில் லாபத்தை கருத்தில் கொண்டு அமல்படுத்தப்படுகிறது.
சாதாரண முன்னுரிமை ஒதுக்கீட்டில் மின் இணைப்பு வழங்க இலக்கீடு செய்து, காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள களப் பணியாளர்கள் காலிப்பணியிடத்தை நிரப்பி, மின் வழித்தடத்தில் உள்ள மரங்கள், முள் புதர்களை நீக்கி, தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.