பெரம்பலூர் மக்களவை தொகுதிக்குள்பட்ட பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி காணொலிக் காட்சி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடினார்.
பெரம்பலூர் சாரதா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் மேலும் அவர் பேசியது:
பா.ஜ.க, அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து வளர்ச்சிக்கு பாடுபடும் கட்சி. நாம் நம் நாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபடுகிறோம். சிலர் குடும்பத்தின் வளர்ச்சிக்குப் பாடுபடுகின்றனர். பா.ஜ.க பெற்ற வெற்றி கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள், பூத் கமிட்டியினரின் கடும் முயற்சியால் கிடைத்தது. நீங்கள் கடுமையாக முயற்சித்தால் வெற்றி கிடைக்கும். அனைவரும் ஒன்றாக இணைந்து, நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுவர தீவிரமாக செயல்பட வேண்டும். அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி மிகப்பெரிய வெற்றி கிடைக்கப் பாடுபட வேண்டும். பா.ஜ.க-வில் மட்டுமே சாமானியரும் உயர் பதவிக்கு வர முடியும். வரும் மக்களவை தேர்தலில் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம்.
மக்களுக்கு சேவை செய்யவே பா.ஜ.க உள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகள் சந்தர்ப்பவாத கூட்டணிக்கும், வாரிசு அரசியலுக்காக மட்டுமே உள்ளன. அவர்கள், தங்களுக்கான அதிகாரத்தை அடைய விரும்புகின்றனர். மற்ற கட்சிகள் போல், நாம் பிரிவினைவாத அரசியல், வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடவில்லை. அனைத்து வழிகளிலும் மக்களுக்கு சேவை செய்யவே உள்ளோம்.
நாட்டின் வளர்ச்சிக்கும், பா.ஜ.க-வுக்கும் வரும் தேர்தல் மிகவும் முக்கியமானது. ஒரு பக்கம் வளர்ச்சி அரசியல் திட்டமும், மறுபக்கம் சந்தர்ப்பவாத கூட்டணி மற்றும் வாரிசு அரசியலும் உள்ளன.
மத்திய அரசு பெரு நிறுவனங்களுக்கு மட்டுமே தொழில் தொடங்கவும், வர்த்தகம் புரியவும் உதவி செய்கிறது எனும் தவறான கருத்து நிலவுகிறது.
உண்மை அதுவல்ல, சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் தொழில் தொடங்கி வளர்ச்சியை எட்டவும் மத்திய அரசு உதவி புரிகிறது என்றார் அவர். நிகழ்ச்சியின்போது, பா.ஜ.க தேசிய பொதுக்குழு உறுப்பினர் எம். சிவசுப்பிரமணியன், கோட்ட துணைத்தலைவர் இல. கண்ணன், மாவட்ட செயலர் சாமி. இளங்கோவன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.