பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் 2 பேர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள புதுவேட்டக்குடி பிரதான சாலையைச்
சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ரமேஷ் (35). இவர், தனது மனைவி வெண்ணிலாவுடன் (32) புதுவேட்டக்குடி- வேப்பூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் செவ்வாய்க்கிழமை சென்றுகொண்டிருந்தார். அப்போது, கருங்குளம் அருகே சென்றபோது, எதிரே புதுவேட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு மகன் செல்லப்பாண்டியன் (23), ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் செல்லபாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ரமேஷ், அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புகாரின்பேரில் குன்னம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.