பெரம்பலூர் மாவட்டம், சின்னவெண்மணி கிராமத்தில் உள்ள வளவனார் சிந்தனைச் சோலை நூலகத்தில் திருவள்ளுவர் பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு, தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற சி. திருநாவுக்கரசு தலைமை வகித்தார். ஜெகதீசன், வீரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாசுகி திருநாவுக்கரசு சிறப்புரையாற்றினார். சிதம்பரம் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் வீரபாண்டியன் திருவள்ளுவர் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு திருக்குறள் சொல்லும் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றோருக்கு திருக்குறள் புத்தகம் பரிசளிக்கப்பட்டது. கரம் கொடு மனிதா அறக்கட்டளை நிறுவனர் பிரபாத் கலாம் வரவேற்றார். வரதராஜன் நன்றி கூறினார்.
இதேபோல், பெரம்பலூரில் அறம் பொருள் இன்பம் அறக்கட்டளை சார்பில், அதன் தலைவர் கி. முகுந்தன் தலைமையில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே திருவள்ளுவரின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில், புலவர் செம்பியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பெரம்பலூர் தமிழ் இலக்கியப் பூங்கா, திருவள்ளுவர் தவச்சாலை அமைப்பு சார்பில், திருவள்ளுவர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு, தமிழ் இலக்கியப் பூங்கா தலைவர் கோ.சி.பா தலைமை வகித்தார். கவிஞர்கள் காப்பியன், அகவி, ப. செல்வக்குமார், ஆ. ராமர் ஆகியோர் திருவள்ளுவர் குறித்து சிறப்புரையாற்றினர். நிர்வாகிகள் பாலாஜி, செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.