பெரம்பலூரில் கத்தியைக் காட்டி மிரட்டி இளைஞரிடம் 3 பவுன் தங்கச்சங்கிலியைப் பறித்த ரெளடிகளை போலீஸார் கைது செய்தனர்.
பெரம்பலூர் அருகிலுள்ள அரணாரைச் சேர்ந்தவர் லோகநாதன் மகன் அருண்மணி (26). இவர், புதுச்சேரியிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சொந்த ஊர் வந்திருந்த அருண்மணி, பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையத்துக்கு வியாழக்கிழமை இரவு சென்றபோது, அங்கு வந்த இளைஞர்கள் 2 பேர் கத்தியைக் காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்து, அவர் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து அருண்குமார் அளித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், சங்கிலியைப் பறித்துச் சென்றது துறைமங்கலம் கே.கே.நகர் நாரயணன் மகன் கபிலன் (24), சார்லஸ் மகன் விக்னேஷ் (22) என்பது தெரிய வந்தது. ரௌடிகளான இவர்கள் இருவரும் கொலை வழக்கில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸார், பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.