பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், கீழப்புலியூர் கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள 2 மின்மாற்றிகள் கடந்த இரு வாரங்களாக பழுதடைந்து செயல்படாமல் இருப்பதால், மின் தடை ஏற்பட்டு கிராமமே இருளில் மூழ்கியது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும், கடந்த ஒரு மாத காலமாக இங்கு கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதுகுறித்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், அடிப்படை வசதிகள் மற்றும் குடிநீர் பிரச்னைகளை நிறைவேற்றி தரக்கோரி கீழப்புலியூர்- பெரம்பலூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த மங்களமேடு போலீஸார் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.