பெரம்பலூர் மாவட்டம், நொச்சியம் கிராமத்திலுள்ள ஏரி தூர்வாரும் பணியை, அங்குள்ள இளைஞர்கள் ஒன்றிணைந்து தங்களது சொந்த முயற்சியில் தொடங்கியுள்ளனர்.
இக்கிராமத்தில் 6 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட ஏரி தண்ணீரைக் கொண்டு சுமார் 200 ஏக்கர் பரப்பளவு விளை நிலங்கள் பாசன வசதி பெற்றன. கடந்த பல ஆண்டுகளாக ஏரி சரிவரப் பராமரிக்காததால் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து, கரை பெயர்ந்து காணப்பட்டது. மேலும் வரத்து வாய்க்கால் சிதிலமடைந்து நீர்நிலை என்பதற்கான அடையாளத்தை இழந்து காணப்பட்டது.
நிகழாண்டு கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டதால், நிலத்தடி நீர் வளம் இம்மாவட்டத்தில் மிகவும் குறைந்தது. இதையடுத்து, பாரம்பரிய நீர்நிலைகளை மீட்டெடுக்க முடிவு செய்த இப்பகுதி இளைஞர்கள் அதற்காக திட்டமிடத் தொடங்கினர்.
நொச்சியம் கிராமத்திலிருந்து வெளிநாட்டுக்கு வேலைக்குச்சென்ற இளைஞர்கள் நிதியுதவி அளிக்க முன் வந்தனர். ரூ. 5 லட்சம் மதிப்பில் ஏரியை புணரமைக்க திட்டம் தயாரானது. அதன்படி, வெள்ளிக்கிழமை காலை அர்ச்சகர்களைக் கொண்டு பூமி பூஜை செய்த இளைஞர்கள், பொக்லைன் இயந்திர உதவியுடன் தூர் வாரும் பணியைத் தொடங்கினர்.