வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாமில் 166 பேர் பங்கேற்றனர்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கம் சார்பில், மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி திட்டத்தின் கீழ் நடைபெற்ற மருத்துவ முகாமுக்கு மேல்நிலைப்பள்ளி தலைமை யாசிரியர் கருணாநிதி, வட்டாரக் கல்வி அலுவலர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்டத் திட்ட உதவி ஒருங்கிணைப்பாளர்கள் ராஜா, நல்லுசாமி முகாமைத் தொடக்கி வைத்தனர்.
மருத்துவர்கள் மின்னத்துல் முபிதா, செந்தில்குமார், பூசனா, ராஜேஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, முடநீக்கியல் வல்லுநர் ஜெயராமன், பரிசோதகர்கள் செந்தில்முருகன், ராஜலிங்கம் ஆகியோர் முகாமில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளைப் பரிசோதித்து உதவி உபகரணங்கள், தேசிய அடையாள அட்டை மற்றும் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரை செய்தனர்.
இதில், சக்கர நாற்காலி 5 குழந்தைகளுக்கும், நடைப்பயிற்சி சாதனம் 7 குழந்தைகளுக்கும், முடநீக்கியல் சாதனம் 17 குழந்தைகளுக்கும், மனவளர்ச்சி குறையுடையோருக்கான கற்றல் கற்பித்தல் உபகரணங்கள்
4 குழந்தைகளுக்கும், பார்வையுடையோருக்கான கற்றல் கற்பித்தல் உபகரணப்பெட்டி 2 குழந்தைகளுக்கும், கண் கண்ணாடி 8 குழந்தைகளுக்கும், சிறப்பு சக்கர நாற்காலி 6 குழந்தைகளுக்கும், செவித்துணைக் கருவி 7 குழந்தைகளுக்கும் என மொத்தம் 56 குழந்தைகளுக்கு வழங்கத் தேர்வு செய்யப்பட்டனர்.
பிறப்பு முதல் 18 வயது வரையுள்ள மனவளர்ச்சி குன்றிய 54 குழந்தைகளும், உடல் இயக்க குறைபாடுடைய 49 குழந்தைகளும், செவித்திறன் குறைபாடுடைய 27 குழந்தைகளும், பார்வைக் குறைபாடுடைய 36 குழந்தைகளும் என மொத்தம் 166 மாற்றுத்திறனுடைய குழந்தைகள் பங்கேற்றனர்.
மேலும், முகாமில் பங்கேற்ற 14 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.