பெரம்பலூரில், திங்கள்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் முதியவர் ஒருவர் செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.
பொள்ளாச்சியிலிருந்து சென்னை நோக்கி கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்புப் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் திங்கள்கிழமை இரவு வந்தபோது, அவ்வழியே சென்ற லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், சென்னை ஆலம்பாக்கத்தைச் சேர்ந்த கண்ணன் (63), இவரது உறவினர்களான கிருஷ்ணன் (65), இவரது மகனும் காரை ஓட்டிவந்தவருமான முரளிதரன் (30), வேல்விழி (47) ஆகிய 4 பேரும் காயமடைந்தனர். தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று, காயமடைந்த நபர்களை மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில், தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற கண்ணன் செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.