பெரம்பலூர் அருகேயுள்ள கவுல்பாளையம் கிராமத்தில் ரூ. 9.23 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட காவலர் குடியிருப்புகளை, காணொளி (விடியோ கான்பரன்ஸ்) மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
கவுல்பாளையம் கிராமத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் ரூ. 9.23 கோடி மதிப்பீட்டில் 3 ஆய்வாளர்கள், 10 உதவி ஆய்வாளர்கள் 63 காவலர்களுக்கான குடியிருப்புகள் என மொத்தம் 76 குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குடியிருப்புகளை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி காணொளி காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் ஆகியோர் குத்து விளக்கேற்றினார். காவலர் குடியிருப்பு வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்து, வீடு ஒதுக்கீடு பெற்ற காவலர்களுக்கு வீட்டு சாவிகளை வழங்கினர். விழாவில், பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வன், வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.