தனியார் சிமென்ட் ஆலை நிர்வாகம் கடந்த ஓராண்டாக வழங்க வேண்டிய சம்பளத்தை பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் திங்கள்கிழமை ஆலை ஊழியர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், கீழமாத்தூரில் இயங்கி வரும் தனியார் சிமென்ட் ஆலையில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் அளித்த மனு:
கீழமாத்தூரில் இயங்கி வரும் தனியார் சிமென்ட் ஆலையில் கடந்த 11 ஆண்டுகளாக 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறோம். இந்நிலையில், கடந்த ஓராண்டாக எங்களுக்கு சிமென்ட் ஆலை நிர்வாகம் சம்பளம் வழங்கவில்லை. இதுகுறித்து ஆலை நிர்வாகம், தொழிலாளர் நலத்துறை அலுவலர்களிடம் புகார் அளித்தும் பலனில்லை. எனவே, மாவட்ட ஆட்சியர் எங்களது ஊதிய நிலுவை தொகையை ஆலை நிர்வாகத்திடம் பெற்றுத்தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
கிரஷர் உரிமையாளர்கள் மனு: பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கும் தனியார் கிரஷர், கல் குவாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அளித்த மனு:
பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 80-க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் ஏலம் விடப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு மட்டுமின்றி, பெரும்பாலான கட்டுமானப் பணிகளும் தடைபட்டுள்ளன. எனவே, கல் குவாரிகளை ஏலம்விட்டு கட்டுமானத் தொழில் நலிவடையாமலும், குவாரி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.