பெரம்பலூர் அருகே சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் முதியவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
பெரம்பலூர் அருகேயுள்ள கோனேரிப்பாளையம் கிராமம், நடுத்தெருவைச் சேர்ந்தவர் நை. பெரியசாமி (65). இவர், தனது மோட்டார் சைக்கிளில் சனிக்கிழமை பெரம்பலூரில் இருந்து கோனேரிப்பாளையம் நோக்கி சனிக்கிழமை சென்றுகொண்டிருந்த போது, கோனேரிப்பாளையம் பிரிவு பாதையில் எதிரே வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெரியசாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று அவரது உடலை மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.