பெரம்பலூர் அருகே நிலத்தகராறு முன் விரோதம் காரணமாக விவசாயியை தாக்கி, கொலை முயற்சியில் ஈடுபட்ட 7 பேருக்கு சிறைத் தண்டனை விதித்து சார்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
குன்னம் வட்டம், அத்தியூரை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் ராமன். அதே கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் ஜெயராமன். இருவருக்குமிடையே நிலத்தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்ததாம்.
இந்நிலையில், கடந்த 2003, ஜூன் 30 ஆம் தேதி ஜெயராமன் மற்றும் தங்கவேலு ஆகியோரை, ராமன் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள் மற்றும் கட்டையால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.
இதுகுறித்து ஜெயராமன் மனைவி அஞ்சலை அளித்த புகாரின்பேரில், மங்களமேடு போலீஸார் வழக்குப் பதிந்து, கொலை முயற்சியில் ஈடுபட்ட அத்தியூரை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் ராமன் (67),கிருஷ்ணமூர்த்தி (27), கிருஷ்ணசாமி மகன்கள் ரவி(எ) ரவிச்சந்திரன் (28), ராஜபூபதி(25), திருமாவளவன் மனைவி அலமேலு (38), நடராஜன் மகன் அன்புராஜ் (32), சுப்ரமணி (45) ஆகிய 7 பேரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பெரம்பலூர் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவில், ராமனுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், அலமேலுக்கு 2 ஆண்டு, கிருஷ்ணசாமிக்கு 7 ஆண்டு தண்டனையும் ரவிச்சந்திரன், ராஜபூபதி, அன்புராஜன், சுப்பிரமணியன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து சார்பு நீதிபதி ஸ்ரீஜா வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
இதையடுத்து கிருஷ்ணசாமி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். வயது முதிர்வின் காரணமாக குறைவான தண்டனை பெற்ற ராமர் மற்றும் அலமேலு ஆகியோர் அபராதத் தொகையை உடனடியாக செலுத்திவிட்டு ஜாமினில் வெளியே வந்தனர்.