பெரம்பலூர் அருகே பட்டப்பகலில் 4 வீடுகளில் திருடிய 3 பெண்களில் பொதுமக்கள் விரட்டியதில் ஒரு பெண்ணைப் பிடித்தனர். தலைமறைவாகிய 2 பெண்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் அருகேயுள்ள குரும்பலூர் கீழ வீதி பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ஹக்கீம் மனைவி ஜெரீனா பேகம். இவரது மகள் சபீனா பேபி. உறவினர் இறந்து விட்டதால் வீட்டைப் பூட்டிவிட்டு ஜெரீனா பேகம் சனிக்கிழமை வெளியூர் சென்றுவிட்டார். அவரது மகள் சபினா பேபி அதே ஊரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு மாலை 5 மணியளவில் வீடு திரும்பியபோது, வீடு, பீரோ திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து அண்டைவீட்டாரிடம் விசாரித்துள்ளார்.
அச்சமயம், அதே தெருவில் வசித்துவரும் கலாவதி தனது வீட்டின் தாழ்ப்பாளை தாழிட்டபடி அண்டை வீட்டாரிடம் பேசிக் கொண்டிருந்த நேரத்தில், அவரது வீட்டினுள் அடையாளம் தெரியாத பெண் புகுந்தார். இதையறிந்த பொதுமக்கள் அந்தப் பெண்ணை விரட்டிப் பிடித்து பெரம்பலூர் போலீஸாருக்கு தகவல் அளித்து அவர்களிடம் ஒப்படைத்தனர். போலீஸார் விசாரணையில், பிடிபட்ட பெண் லப்பைக்குடிக்காட்டைச் சேர்ந்த காலித் மனைவி சம்சாத் பேகம் (40) என்பதும், அவருடன் மேலும் 2 பெண்கள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
அப்துல் ஹக்கீம் மனைவி ஜெரீனா பேகம் வீட்டிலிருந்து 5 பவுன் நகை மற்றும் ரூ. 50 ஆயிரம் திருடியதும், அவற்றைத் தப்பி ஓடிய 2 பெண்கள் எடுத்துச்சென்றதும் தெரியவந்தது. பின்னர், சம்சாத் பேகத்தை கைது செய்து போலீஸார் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.