பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே வெவ்வேறு சம்பவங்களில் ஊராட்சி செயலர் உள்பட 2 பேர் சனிக்கிழமை இரவு உயிரிழந்தனர்.
குன்னம் அருகேயுள்ள சிறுகுடல் கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி (56). இவருக்கு தொடர் வயிற்று வலி இருந்ததாகக் கூறப்படுகிறது. பல மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம். இதனால் மனமுடைந்த மூர்த்தி கடந்த 8 ஆம் தேதி விஷம் குடித்தார். இதையடுத்து பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்றுவந்த அவர் சனிக்கிழமை இரவு அங்கு உயிரிழந்தார். அவரது சகோதரர் வேல்முருகன் அளித்த புகாரின் பேரில், மருவத்தூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
தவறி விழுந்த ஊராட்சி செயலர் சாவு:
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகேயுள்ள எறையூர் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (49). எறையூர் ஊராட்சி செயலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், சனிக்கிழமை இரவு வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலகப் பணியை முடித்துவிட்டு, வேப்பந்தட்டையிலிருந்து எறையூருக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அனுக்கூர் அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த சங்கர் பலத்த காயமடைந்தார்.
பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் மங்களமேடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.