மாணவர்கள் தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடா முயற்சியைக் கடைப்பிடித்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்றார் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் 25 ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கிய அவர் மேலும் பேசியது:
பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளிடம் சகஜமாக பழகுவதுடன் பாசத்துடன் இருக்க வேண்டும். இளம் வயது பிள்ளைகளிடம் பெற்றோர்கள் கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டும். ஆண், பெண் பிள்ளை எனும் பேதம் பார்க்காமால் இளம் வயதிலேயே அனைத்து வேலைகளையும், அவர்களே செய்து கொள்ளப் பழக்க வேண்டும். அது, அவர்களது எதிர்காலத்துக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
இதனால், எதிர்காலத்தில் மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. நல்ல மனிதர்களை உருவாக்குவது கல்வியே. அந்தக் கல்வியை சிறந்தமுறையில் கற்றுக்கொள்ள வேண்டும். கல்வியே உங்களது வாழ்க்கையை சிறப்பிக்கும். தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றை கடைப்பிடித்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்றார் அழகிரிசாமி.
தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவுக்கு, துணைத் தலைவர் அனந்தலட்சுமி கதிரவன், இயக்குநர் ஆர். ராஜபூபதி ஆகியோர் முன்னிலை வகித்தார். மெட்ரிக். பள்ளி முதல்வர் பிரேமலதா ஆண்டறிக்கை வாசித்தார்.
இதில், கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அலுவலர் எஸ். நந்தகுமார், தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி முதல்வர் கோவிந்தசாமி, ஆங்கில வழிக்கல்வி முதல்வர் மாலா, திருச்சி மெட்ரிக். பள்ளி முதல்வர் செல்வராணி மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.