பெரம்பலூர் மாவட்டம், அனுக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அப்பகுதி மக்கள் ரூ. 2.75 லட்சம் மதிப்பிலான கல்விச் சீர் பொருள்களை வியாழக்கிழமை வழங்கினர்.
இவ்விழாவுக்கு பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலர் மாரிமீனாள் தலைமை வகித்தார். வேப்பந்தட்டை வட்டார வள மைய மேற்பார்வையாளர் ரமேஷ், ஆசிரியர் பயிற்றுநர் ராஜேஸ்வரன் முன்னிலை வகித்தனர்.
பள்ளிக்குத் தேவையான தளவாட பொருள்கள், மின் விசிறிகள், மேசை, நாற்காலிகள், பீரோ, தண்ணீர் குடங்கள், குப்பைக் கூடைகள், கேரம் போர்டு உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள், பள்ளி கிணற்றை ஆழப்படுத்துவதற்கான நிதி என ரூ. 2.75 லட்சம் மதிப்பிலான பொருள்கள் மற்றும் நிதி உதவிகளை ஊர்வலமாக கொண்டுவந்து வழங்கினர். இதில், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், கிராம மக்கள், பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர், ஆசிரியைகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேல்நிலைப்பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் சேகர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். முன்னதாக, பள்ளித் தலைமைமாசிரியர் செல்வகுமார் வரவேற்றார். நிறைவில், உயர்நிலைப்பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.